கங்கைகொண்ட சோழபுரம்
தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு.
அதாவது பெரிய கோயில் விமானத்தில் காணப்படாத நெளிவுகள், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் காணப்படுவது பெண்ணின் நளினத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.
இதன் காரணமாகவே பெரிய கோயிலைப் போன்றே கட்டப்பட்டிருந்தாலும், சோழபுரம் கோயிலைப் பார்க்கின்றபோது ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோன்ற புது உணர்வு உண்டாகிறது.
பெருவுடையார் கோயில் தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது.
1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்றதோடு கங்கையையும் வெற்றிகொண்டான். அந்த வெற்றியின் காரணமாக 'கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டப்பெயரும் அவனுக்கு வழங்கப்பட்டது.
அதோடு அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. அதேவேளை கலைப்பொக்கிஷமான இந்த பெருவுடையார் கோயிலும் கட்டப்பட்டது.
தஞ்சை பெரிய கோயிலின் விமானம் 216 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானத்தின் உயரமோ 160 அடியே ஆகும்.
அதேபோன்று 13 நிலைகள் கொண்ட பெரிய கோயில் விமானத்தோடு ஒப்பிடுகையில் சோழபுரம் கோயில் விமானத்தில் 8 நிலைகளே உள்ளன.
ஆனால் நம் உள்ளங்களை கவரும் கவின் கொஞ்சும் வளைவுகள் சோழபுரம் கோயில் விமானத்தில் காணப்படுவதால், அதற்கு ஒரு பெண்ணியல்பை இவைத் தருகின்றன.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஒருகாலத்தில் கோயிலாக மட்டுமில்லாமல் சிறந்த கோட்டையாகவும் விளங்கியிருக்கிறது. இப்போதும் கோயிலின் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரணும், மேற்கே சிறிய அரண் ஒன்றும் உள்ளது.
340 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலின் மண்டபம் 175 அடி மற்றும் 95 அடி நீள அகலத்துடன் காட்சியளிக்கிறது.
அதோடு மண்டபத்தையும், கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி ஒன்று அமைந்துள்ளது.
தஞ்சாவூர் கோயிலில் இருப்பதுபோன்றே இந்த இடைவழியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணைக் கவரும் துவார பாலகர்களுடனும், படிக்கட்டுகளுடனும் மிளிர்கின்றன.
பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்கிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்திலேயே அம்மனுக்கும் ஒரு தனிக் கோயில் இங்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சந்நிதி, கோயில் கட்டிய பின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் 13-ஆம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயிலில் இல்லாத சிறப்பாக இந்தச் சிற்பத்தை பலர் குறிப்பிடுகின்றனர். அருகில் பார்வதி வீற்றிருக்க, காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார்.
கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிம்ஹகேணி என்பது சிங்கத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறு.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த நந்தி இந்தியாவின் மிகப்பெரிய நந்திகளில் ஒன்று.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிவபெருமானுக்கு முன்பு இரண்டு நந்திகள் இருக்கின்றன. இவற்றில் பெரிய நந்தி மண்டபத்துக்கு வெளியேயும், சிறியது மண்டபத்தின் துவக்கத்திலும் அமையப்பெற்றுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் அந்திவேளை தோற்றம்.
ராஜேந்திர சோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றான 'சோழ கேரளன் திருமாளிகை' கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அதன் சுவடுகள்தான் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இந்த அரண்மனையிலிருந்து, சோழபுரம் பெருவுடையார் கோயிலுக்கு சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் - கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்:
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். பெரிய நாயகி பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.
கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.
பெரிய லிங்கம்:
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.
தினமும் சூரிய தரிசனம்:
இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.
சந்திரகாந்த கல்:
கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.
அன்னாபிஷேகம்:
காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூட்டை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.
அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.
சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம்:
இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.
குழந்தை வடிவில் துர்க்கை:
இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை "மங்கள சண்டி' என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது.
ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.
கணக்கு விநாயகர்:
ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து "பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?' என கேட்டான்.அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். "காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு' என நினைவு வந்தது. எனவே "கணக்கு விநாயகர்' என்று அழைக்கப்பட்டார். தற்போது "கனக விநாயகர்' எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.
கோபுர அமைப்பு:
இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப்போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழா:
மாசி சிவராத்திரி,மார்கழி திருவாதிரை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜையும்,பங்குனித்திருவிழாவின் கடைசி நாளில் துர்க்கைக்கு 500 குடம் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 100 மூட்டை பச்சரிசியை சமைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி 100 மூட்டை பச்சரிசியை சமைத்து சிவலிங்கம் மீது சாற்றி அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
அன்னாபிஷேகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். இங்கு ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப் பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, உலக புராதன சின்னங்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ராஜேந்திர சோழனால் கலை நயத்துடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர்.
இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் சுற்றளவு 62 அடி, உயரம் 13½ அடி ஆகும். இந்த சிவலிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்ற சிறப்பும் உண்டு. இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் அன்னா பிஷேகம் நடைபெறுவது வழக்கம். காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 28 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.
சிறப்பு அலங்காரம்
இங்கு 29–வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை பச்சரியை 5 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். மாலை வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன.
இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பல காரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
இதைத்தொடர்ந்து மாலையில் மகா தீபாராதனை நடந்தது. லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவில் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களின் சாதம் போக மீதமுள்ள சாதம் அருகில் உள்ள குளத்தில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.
Thanks: Daily Thanthi.
© gangaikondacholapuram.com | Images: gangaikondacholapuram.com | Design: wisenatural